
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடுககுடியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கௌசல்யா (வயது 32), கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கௌசல்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று தனது மகளுக்காக உணவு வாங்க மருத்துவமனைக்குள் உள்ள தனியார் உணவகத்துக்கு ஜெயராமன் சென்றுள்ளார். அங்கு, நான்கு இட்லி மற்றும் சாம்பாரை வாங்கி மகளுக்கு கொடுத்துள்ளார். சாப்பிட தொடங்கிய கௌசல்யா, இரண்டாவது இட்லிக்கு சாம்பாரை ஊற்றியவுடன் அதில் இறந்த பல்லி ஒன்று விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இது குறித்து தந்தை ஜெயராமனிடம் கூறினார். கடையில் சென்று உரிமையாளரிடம் கேட்டபோது, “தவறுதலாக விழுந்திருக்கலாம்” என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜெயராமன், உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த மற்ற நோயாளிகளின் உறவினர்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தினைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அனைவரையும் சமாதானப்படுத்தினர். மேலும், மருத்துவமனை அதிகாரிகளிடம் முறையிடுமாறு ஜெயராமனிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் கூறுகையில், “இது தொடர்பாக தனியார் உணவக உரிமையாளரிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளேன். போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் சாப்பாடு தரும் தனியார் உணவகங்களில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன என்ற கேள்விகளை எழுப்புகிறது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.