மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆளும் கட்சி என்றால் அது அதிமுக மற்றும் திமுக மட்டும் தான். சட்டமன்ற தேர்தல் மற்றும் ராஜ்ய சபா சீட் போன்றவைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார். நாங்கள் எப்படி கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை ஆறு மாத காலம் பொருத்து இருந்து பாருங்கள் என்றார்.

அதன் பிறகு பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என நினைத்து கற்பனை செய்து பார்க்காதீர்கள். நீங்கள் கற்பனை நாயகனாக மாற வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. நாளை சாவதற்கு இன்றே போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா .? என்றோ நடக்கப் போவதற்கு இன்றே ஏன்  கற்பனை செய்கிறீர்கள். மேலும் ஜெயலலிதா எம்ஜிஆர் போன்று எடப்பாடி பழனிச்சாமியும் ராஜ்யசபா சீட் குறித்து சொன்ன வாக்கை நிறைவேற்றுவார் என்று கூறினார்.