கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன் அருகே அடையாறு பகுதியில்  பீகாரை சேர்ந்த தம்பதியின்  10 மாத குழந்தை அனீஷ் குமார். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு திருமண அலங்கார பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்ததுடன், பீடி புகைத்த பின் மீதமுள்ள துண்டுகளை வீட்டில் போட்டுவிடும் பழக்கமும் இருந்தது.

சம்பவத்தன்று, வழக்கம்போல் பீடி புகைத்த தந்தை, மீதமிருந்த பீடியை வீட்டுக்குள் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதே நேரத்தில், 10 மாத குழந்தையான அனீஷ், அந்த பீடியை எடுத்து வாயில் போட்டுவிட்டான்.

பீடித் துண்டு தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தாயும் தந்தையும் அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மங்களூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.

குழந்தையை இழந்த தாயார், கணவரின் அலட்சியமே காரணம் எனக் கூறி மங்களூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “அவரிடம் வீட்டில் பீடித்துண்டுகளை போடாதீர்கள் என எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். குழந்தை தவழ்ந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே கிடப்பதையெல்லாம் வாயில் போடுகிறது.

ஏற்கனவே ஒரு முறை இப்படியே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது என் மகனை இழந்துவிட்டேன்” என்று கூறி அழுதார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.