நல்கொண்டா மாவட்டத்திலுள்ள உக்கடம் கிராமத்தில் கல்யாணி (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கொம்பனபொயின மது, அரூரி சிவா ஆகிய இரு வாலிபர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இளம்பெண்ணிடம் எங்கள் இருவரில் ஒருவரை கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். ஒருவேளை அப்படி செய்யாவிட்டால் உன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அந்த இளம் பெண் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.

இந்நிலையில் சம்பவ நாளில் கல்யாணி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர் தன்னுடைய பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து தன் மகளை மீட்குமாறு கூறினர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்த நிலையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.