இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜங்க்புரா என்ற பகுதியில் தமிழர்களுக்கான முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமில் குடிசையிட்டு சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு 370 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.

அந்த பகுதியில் கால்வாய் அமைப்பதற்காக  அங்குள்ள குடிசை வீடுகளை அப்புறப்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் முகாமில் இருக்கும் குடிசை வீடுகளை இடிப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது.

அந்தப் பகுதியில் வாழ்ந்த பாதி குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டது. அந்த இடமும் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் வசித்து வந்த எங்களை திடீரென்று வெளியேற்றினால் எங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்குமாறு அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.