சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு ஈசிஆர் முட்டுக்காடு படகு குலாம் மேம்பாலத்தின் மீது கோவளம் கடலில் பக்கிங் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக நான்கு வாலிபர்கள் காரில் சென்றனர். அவர்கள் வந்த காருக்கு பின்னாலேயே இளம் பெண்கள் காரை நிறுத்தியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து பெண்கள் முதலில் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். அப்போது இளம்பெண்களின் கார் எதிர்பாராதவிதமாக வாலிபர்களின் காரை லேசாக உரசியதாக தெரிகிறது. உரசி விட்டு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றதால் வாலிபர்கள் இளம் பெண்கள் சென்ற காரை விடாமல் துரத்தி சென்றனர்.

இதனை அந்த பெண்கள் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அந்த பெண்கள் அச்சத்தில் முட்டுக்காடு மேம்பாலம் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கானத்தூர் பகுதியில் தாங்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வரை காரை ஓட்டி சென்றனர். ஆனாலும் விடாமல் அந்த வாலிபர்கள் காரை துரத்தி வந்து சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவதூறாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வாலிபர்களின் காரை உரசி சென்றதால் அதற்கு நியாயம் கேட்கவே காரை நிறுத்த சொல்லியுள்ளனர். ஆனாலும் இளம்பெண்கள் காரை நிறுத்தாமல் சென்றதால் அவர்கள் துரத்தி வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தனிப்படை அமைத்து வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது