
பிரபல காமெடி நடிகரான வடிவேலும் சிங்கமுத்துவும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூபில் தரக்குறைவாக பேசியதால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தன்னை பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்தை தெரிவிக்கக் கூடாது. வடிவேலு பற்றி ஏற்கனவே பேசி இருந்த வீடியோக்களை யூட்யூப்பில் இருந்து நீக்கி பதிலுரை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
சிங்கமுத்து பதிலுரை தாக்கல் செய்யாததால் வடிவேலு பற்றி அவதூறாக பேச தடை விதிக்கப்பட்டது. தனது உடல்நலம் மற்றும் வயதை காரணம் காட்டி அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை கூற மாட்டேன் என சிங்கமுத்து தரப்பில் உத்தரவாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.