
மும்பை நகரத்தில் உள்ள ஆரே காலனி பகுதியில், 60 வயதான மூதாட்டி ஒருவர் சாலையோர குப்பைக்குவியலில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யசோதா கைக்வாட் என அடையாளம் காணப்பட்ட இந்த மூதாட்டி, சரும புற்றுநோயால் (skin cancer) பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. சனிக்கிழமை காலை இந்த காட்சியை கண்ட மும்பை போலீசார், உடனடியாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, “என்னை என் பேரனே இங்கு தூக்கி கொண்டு போட்டு விட்டார்” என மூதாட்டி தெரிவித்திருக்கிறார். மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருந்த இவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல போலீசார் முயற்சி செய்தபோதும், பல மருத்துவமனைகள் அவருடைய உடல் நிலையை காரணமாக காட்டி அனுமதிக்க மறுத்தன. இறுதியில் மாலை 5.30 மணியளவில் கூப்பர் மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அது வரை மூதாட்டி சாலையோரம் குப்பைகளில் கிடந்தார் என்பது ஆழ்ந்த சோகம்.
மூதாட்டி தன்னைச் சுற்றி உள்ள உறவினர்கள் தொடர்பான மாலாட் மற்றும் கண்டிவாலி ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய குடும்பத்தினரை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். மூதாட்டியின் புகைப்படம் மும்பை காவல் நிலையங்களுக்கு அனுப்பி, உறவினர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு பேரன் இந்த அளவுக்கு மனிதநேயமற்ற செயல்கள் செய்ய முடியுமா? என்ற கேள்வி சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.