
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவரை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி எனும் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரில் உள்ள காப்ரபட்டியில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த தொழிற்சாலை சோட்டு குர்ஜார் என்பவரின் வசத்தில் உள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தில், சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத்தை திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர். அவர்கள் இருவரையும் முதலில் நிர்வாணமாக்கிய பின்னர், நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் தண்டித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் அரைநிர்வாண நிலையில் ஒருவர் மின்சாரம் கொடுக்கப்பட்டு தாக்கப்படுகிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
தாக்குதலிலிருந்து தப்பிய இருவரும், தங்களது சொந்த ஊரான ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு தப்பிச் சென்று, அங்குள்ள குலாப்புரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் “எப்ஐஆர்” பதிவு செய்யப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்த கோர்பா மாவட்டத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட அபிஷேக் கூறும்போது, “எனது வாகனத்திற்கான EMI கட்ட ₹20,000 முன் பண சம்பளம் கேட்டேன். அதை மறுத்த தொழிலாளரிடம், நான் வேலையை விலகுவேன் என்றதும், அவர் திடீரென தாக்கத் தொடங்கினார். அதனுடன் வினோத்தையும் சேர்த்து தாக்கினர்,” என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என கோர்பா சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தின் SHO பிரமோத் தத்சேனா தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.