கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தாணம்மாள் என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வியாபாரம் செய்ய விடாமல் மூதாட்டிக்கு தொந்தரவு அளிப்பதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூதாட்டியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.