சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த முகமது பாரிஸ் அசன், ஆகாஷ், தினேஷ், பாலமுருகன் ஆகிய நான்கு பேர், ஆயுதங்களைக் காட்டி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் (Reels) வெளியிட்டு, அதனை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி, மானாமதுரை போலீசார் இந்த நால்வரையும் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், மானாமதுரை தாலுகா காவல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர்கள் குகன், ராஜதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்களுக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் வாவா நகரைச் சேர்ந்த நயினார் என்பவர், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியதைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, தனிப்படை போலீசார் குற்றாலம் சென்று நயினாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாள், வீச்சரிவாள், கத்தி போன்ற மொத்தம் 25 தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்த விசாரணையின் போது, நயினார், தென் மாவட்டங்களில் உள்ள பல ரெளடி குழுக்களுக்கு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. தற்போது, அவரிடம் ஆயுதங்கள் வாங்கிய மற்ற ரெளடிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.