
சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல அம்மன் கோவிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். நான் அந்த கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது எனக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.
அப்போது அவர் என்னை தன்னுடைய சொகுசு காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று தீர்த்தம் எனக்கூறி ஒரு திரவத்தை குடிக்க தந்தார். அதைக் குடித்த சிறிது நேரத்தில் நான் மயக்கமானேன். அப்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதன் பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அம்மன் கோவிலில் வைத்து தாலி கட்டினார். நாங்கள் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று என் கருவை கலைத்ததோடு என்னை பாலியல் தொழிலுக்கு தள்ள முயற்சி செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.