
உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், மணப்பெண், வழக்கறிஞர், தொழிலதிபர் என பல்வேறு அடையாளங்களை ஏற்று மக்களை நம்ப வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான பணத்தையும் நகைகளையும் பறித்த ஹினா ராவத் என்ற பெண், கடைசியாக ருத்ராபூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்கொண்ட மோசடி நடவடிக்கைகள் தற்போது வெளியாகி, போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட தீபக் கக்கர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹினா ராவத் தனது பெயரை அங்கிதா சர்மா எனக் கூறி, “நைனிடால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்” என அடையாளம் காட்டி அவருடன் தொடர்பு கொண்டு, முதலில் ₹5 லட்சம் பறித்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்வதாகக் கூறி அவரது வீட்டில் வசிக்கத் தொடங்கி, ₹30 லட்சம் பணத்தை கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளார். “பணம் தரவில்லை என்றால், தற்கொலை செய்து உங்களை சிக்க வைக்கிறேன்” எனக் கூறி தீபக்கையும் அவரது குடும்பத்தையும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தீபக் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஹினா ராவத்தின் உண்மை முகம் வெளிச்சத்துக்குத் தெரிந்தது. இவர் வெறும் காதல் மோசடி அல்லாமல், வணிக ஒப்பந்தங்கள், பிராண்ட் தூதர் பொய்கள், போலி திருமணங்கள் போன்ற பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளார்.
பிரபல நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும், உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் வேடமணிந்து, ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் வசூலித்து வந்துள்ளார்.
அதுமட்டுமன்றி, ஹினா ராவத், திருமண இணைய தளங்கள், சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் போன்றவற்றைச் செயல்படுத்தி, தன்னை தகுதியான மணப்பெண் என்றும், தனக்கு செல்வந்த இளைஞன் தேவை என்றும் காட்டி, பலரை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர், திருமணமானவுடன் அவர்களுடன் வாழ மறுத்து, வன்முறை, தற்கொலை மிரட்டல், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி, பணம் பறிப்பது இவரது வழக்கம். இதேபோல் 50க்கும் மேற்பட்டவர்களிடம் இவர் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹினா ராவத் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்படும்போது, ₹50,000 ரொக்கம், போலி ஆதார் அட்டை, பல சிம்கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இவர் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பல காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதும் உறுதியாகியுள்ளது.
போலீசார் முழுமையான விசாரணையில் இறங்கி, இவர் செய்த மோசடிகளின் முழுமையான பட்டியலை திரட்டித் தரவாக பதிவு செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள், பொய்யான அடையாளங்கள் மற்றும் பாசான காதல்களால் ஏமாறும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.