ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கலேகான்பேட்டை என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்கான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உஷாராணி என்ற பெண், தனது மகன், மகளுடன் சேர்ந்து, தன் கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.டெக் படிக்கும் மகனும், பள்ளியில் படிக்கும் மகளும் தங்கள் தாயுடன் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மூவரும் இணைந்து பிரசாத்தை தாக்கிய பிறகு, அவர் இறந்துவிட்டதாக எண்ணி, அவரது உடலை ஒரு கிணற்றில் வீசியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் உஷாராணி தவறான தகவலை போலீசிடம் தெரிவித்தார். தனது உறவினர்கள் பிரசாத்தை தாக்கியதாக புகார் அளித்திருந்தார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சுயநினைவு அடைந்ததும், உண்மை அம்பலமானது.

தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் தன்னைக் கொல்ல முயன்றதாக அவர் கூறினார். இது காவல்துறையினரையே அதிர்ச்சியடையச் செய்தது. விசாரணையின் போது, உஷாராணி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தனது கணவர் அடிக்கடிதகராறு செய்து திட்டிப் பேசுவதாகவும், அதை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பிரசாத் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவரது கை, கால்களை கட்டிப் போட்டு, மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் அவர் அசையாமல் இருப்பதை பார்த்துவிட்டு, இறந்துவிட்டார் என எண்ணி, உடனே அவரை கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலுமாக, கிணற்றில் வீசிய பிறகு அவர் மீது கற்களும் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, உஷாராணி மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர். பிரசாத் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.