
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வி.சி.வி. லேஅவுட் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான உணவகம் “கோவை பிரியாணி”. கடந்த மே 27-ஆம் தேதி பிற்பகல் 2:50 மணியளவில், நால்வர் கொண்ட குழுவினர் ஒரு காரில் மது போதையில் அந்த உணவகத்துக்குள் வந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். ஊழியர் சிக்கன் குழம்புடன் பிரியாணியை இலையில் பரிமாறியதைத் தொடர்ந்து, அதில் பல்லி இறந்து விழுந்துவிட்டது என ஒருவர் கூச்சலிட்டார்.
உடனே அவருடன் வந்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு ஊழியரை மிரட்டியதாக கூறப்படுகிறது. உணவக மேலாளர் சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிசோதனை செய்த போது, அந்த பல்லி உணவுக்குள் விழுந்ததல்லாமல் செயற்கையாக அவர்களால் போட்டது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குழுவில் ஒருவர் வெளியே சென்று வாந்தி எடுப்பது போல நடித்து, மற்றொருவர் அதை வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் உமாபதி, CCTV காணொளி பதிவுகளை ஆய்வு செய்து, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாக இருப்பது உறுதி செய்தார்.
அதே நேரத்தில், மாலை 3 மணிக்கு நடந்த சம்பவம் பற்றிய தகவலை, அதற்கு முன்னதாகவே 1:20 மணிக்கு பத்திரிகையாளர்களிடம் நடராஜன் என்பவர் தெரிவித்திருப்பது கூடுதல் ஆதாரமாக உள்ளது. இதனையடுத்து உரிமையாளர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதனை அடிப்படையாக கொண்டு, ஆர்.எஸ்.புரம் போலீசார் நடராஜன் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.