உதய்பூர் நகரத்தின் கரோல் காலனியில் செவ்வாய்க்கிழமை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை, சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து தெருநாய்கள் கடித்து குதறியது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், சிறுவன் தனியாக நின்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நாய்கள் திடீரென தாக்கும் காட்சிகள் உள்ளன.

இந்த தாக்குதலால் சிறுவன் பலத்த காயங்களுடன் கீழே விழுந்து அலறிக் கொண்டிருந்தான். அந்தச் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து மக்கள் விரைந்து வந்து, நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தும், இந்த சம்பவம் முழு பகுதியில் பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

காயமடைந்த சிறுவன், “வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், நாய்கள் திடீரென பாய்ந்து கடிக்கத் தொடங்கின. நான் ஓடினேன், ஆனால் தப்பிக்க முடியவில்லை” என்று கூறி கதறியதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நகராட்சி மற்றும் உள்ளூர் கவுன்சிலரிடம் பலமுறை புகார் அளித்தும், தெருநாய்கள் பற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை வீடு வெளியே அனுப்ப கூட மறுக்கும்  நிலையில் உள்ளனர்.