முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும் மெசேஜிங் பயன்பாடு டெலிகிராம்-ஐ உருவாக்கியவர் பாவெல் துரோவ். தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய செல்வந்தராக வலம்வரும் இவர், தற்போது தனது 13.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை, தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கே எழுதி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரான்சில் லெ பாயிண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது,

எனக்கு மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் அவர்கள் மூலமாக 6 குழந்தைகள் இருக்கிறார்கள். அதே நேரத்தில், உலகின் 12 நாடுகளில், விந்தணு தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நான் உயிரியல் தந்தையாக இருக்கிறேன். “இயற்கையாகவே பிறந்த குழந்தைகள் மற்றும் விந்தணு தானத்தால் பிறந்தவர்களுக்கு இடையே எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் அனைவரும் எனது குழந்தைகளே. ஒரே உரிமையுடனும், ஒரே நேசத்துடனும் அவர்களை நேசிக்கிறேன். ஆனால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு எவருக்கும் எனது சொத்தை பயன்படுத்த அனுமதி இருக்காது” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாவெல் துரோவ் ஏற்கனவே தனது டெலிகிராம் பக்கத்தில், “உலகளவில் ஆரோக்கியமான விந்தணுக்களின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதனை சமாளிக்க நான் என்னால் இயன்ற உதவியை செய்தேன். இந்த வழியாக குழந்தைகளைப் பெற முடியாத குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்க முடிகிறது” என பதிவு செய்திருந்தார். இவரது இந்த பார்வை உலகளவில் வியப்பையும், சில இடங்களில் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

பாவெல் துரோவின் காதல் வாழ்க்கையைப் பற்றியும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்களைப்பற்றியும் கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹங்கேரிய செல்வாக்கு மிக்க டயானா பாக்கோ மற்றும் பத்திரிகையாளர் டாரியா பொண்டரென்கோ ஆகியோர் இவருடன் பெயர் கூடியவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும், சட்டபூர்வமாக துரோவ் அங்கீகரித்துள்ள ஆறு குழந்தைகளில் மூன்று குழந்தைகள், அவரது முன்னாள் உறவான இரினா போல்கருடனான உறவில் பிறந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த முடிவுகள் பாவெல் துரோவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, சமூக பார்வையை மாற்றும் ஒரு புதிய திசையை உருவாக்குகின்றன என்றே கூறலாம்.