தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சோமாஜிகுடாவில் தொழிலதிபரான வேலுமதி சந்திரசேகர ஜனார்த்தன ராவ்(86) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சந்திரசேகர ஜனார்த்தன ராவ் மூத்த மகள் வழி பேரன் ஸ்ரீ கிருஷ்ணாவை ஒரு நிறுவனத்தின் இயக்குனராக நியமித்துள்ளார். மற்றொரு மகள் சரோஜினி தேவியின் மகன் கிலாரு கீர்த்தி தேஜா(29) என்பவருக்கு நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை சந்திரசேகர ஜனார்த்தன ராவ் மாற்றியுள்ளார். கடந்த ஆறாம் தேதி சரோஜினி தனது மகன் தேஜாவுடன் தந்தை வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். அப்போது சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

பரம்பரை சொத்துக்களை பங்கிடுவதில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக தேஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த தேஜா தனது தாத்தாவை 73 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். அதனை தடுக்க வந்த சரோஜினியையும் தேஜா 4 முறை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சரோஜினியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.