
தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க வந்தார்.
அவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு தான் ஆகிறது. இந்நிலையில் ராஜபாண்டி மாரிமுத்துவிடும் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது மாரிமுத்து தன்னிடம் சிகரெட் இல்லை என கூறியதால் மூன்று பேரும் சேர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாரிமுத்து தனது அண்ணன் ஹரியிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.
இதனால் ஹரியும் அங்கு வந்து விட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வேல்முருகன் உள்ளிட்ட மூன்று பேரும் மாரிமுத்துவை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ஹரி தாக்கியதால் பட்டுசாமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பட்டுசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாரிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.