பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னை கமலாயத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டார். அதாவது டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் நிலையில் இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பாஜகவினர் அந்த மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடிய நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அதில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, டெல்லி வெற்றியை அகில இந்திய பாஜக தலைவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தலைநகர் டெல்லியில் பாஜக தலைநிமிர்கிறது. ஆம் ஆத்மி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. டெல்லி தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தலைவர்கள் சென்று பிரச்சாரம் செய்தார்கள். என்னை பொறுத்தவரையில் இது மிகப்பெரிய வெற்றி. தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழ்நாட்டிலும் கண்டிப்பாக 2026ல் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தலைநகரில் தற்போது தாமரை மலர்ந்ததை கொண்டாடுவது போன்று 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்ததை கொண்டாடுவோம் என்று கூறினார். மேலும் ஊழல் வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி உள்ளனர்.  இந்தியா கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்பதற்கு இதுவே சான்று என்றும்  கூறினார்.