
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கை என்பது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்டர் பெல் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதன்படி மாணவ மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் விதமாக அனைத்து பள்ளிகளும் வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் காலை 11 மணி, மதியம் ஒரு மணி மற்றும் பிற்பகல் 3:00 மணிக்கு வாட்டர் பெல் அடித்து மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை அரசு பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளியே செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஏற்கனவே இந்த திட்டம் புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அமலில் இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.