தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது‌. அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்ற பல மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கு கீழ் பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டு பாட வேளைக்கு ஏற்றபடி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை போட்டிகள் நடத்த வேண்டும்.

இதனை வாராந்திர முறையில் செயல்படுத்துவது அவசியம். அதன்பிறகு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.