தமிழகத்தில் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய நேரடி பட்டா மாற்றம் போன்ற விண்ணப்பங்களுக்கான தனித்தனி வரிசை எண் வழங்கப்பட்ட அவற்றின் மீது உரிய நேரத்தில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களில் 81.76 லட்சம் பட்டா மாறுதல்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பொதுமக்கள் நேரடித் தன்மையுடன் விரைந்து பெற்று பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது விண்ணப்பங்களை பெற்ற வரிசைப்படி உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு முதலில் வருவோருக்கே முதல் சேவை என்ற முறையில் கடந்த 4-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களை பெறுவதற்கும்  முதலில் வருவோருக்கே முதலில் சேவை என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.