சமீபத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இந்து முன்னணி அமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனால் மத பிரச்சினை உருவாகாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இன்று காலை முதல் திருப்பரங்குன்றத்தில் நாலாயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டார்கள். மேலும் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.

144 தடை உத்தரவால் மதுரைக்கு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருக்கும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவாகாரத்தில் தமிழக முழுவதும் 144 தடை உத்தரவா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.