
நாமக்கல் மாவட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் மூதாட்டி கட்டியதால் கோபத்தில் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக ஐடிவிங்கை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.