
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2 நாட்களாக அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நாளை கோவை மற்றும் நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்றைய தினம் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.