சூரத்தின் பெஸ்தானில் உள்ள விஜய் லட்ச்மி நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் அஷுதோஷ், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த வினோத் பிரதான் என்ற தொழிற்துறையில் பணியாற்றும் நபரின் மகனான அஷுதோஷ், கடந்த ஆண்டு 8ம் வகுப்பை முடித்திருந்தார். அவரின் பிறந்த நாளையொட்டி குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருந்தனர்.

விழாவிற்காக அவரது தந்தை மற்றும் தாயார் இருவரும் பிறந்தநாள் கேக் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அஷுதோஷ், நைலான் கயிற்றை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், தங்களுடைய மகன் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். வினோத் பிரதானின் கதறும் சத்தம் கேட்ட அண்டை வீட்டு மக்கள் விரைந்து வந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.