தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சையது சபீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் இரண்டரை வயதுடைய சாந்தினி சாரா.

சம்பவம் நடந்த அன்று அருண்குமார் வேலைக்கு சென்ற பிறகு சையது சபீனா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் திடீரென சத்தம் கேட்டது. அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை மர்மமான முறையில் மயங்கி கிடந்தது.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மின்சாரம் தாக்கி குழந்தை இறந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.