சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் சிவசக்தி நகரில் சரித்திர பதிவேடு ரவுடியான ஜீவா(29) என்பவர் வசித்து வந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவாவின் நண்பர்களான வாழ்வரசன் மற்றும் ரகு ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்தனர். இதனையடுத்து மது அருந்தலாம் என ஆசை வார்த்தைகள் கூறி அவர்கள் ஜீவாவை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மதுவாங்கி கொடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாழ்வரசனும், ரகுவும் சேர்ந்து ஜீவாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து அறிந்த ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கொளத்தூர் வெங்கட்நகரை சேர்ந்த வாழ்வரசன் என்பவர் ஜீவாவுடன் நெருக்கமாக பழகியது தெரியவந்தது. ஜீவா அடிக்கடி வாழ்வரசன் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது வாழ்வரசனின் மனைவிக்கும் ஜீவாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த வாழ்வரசன் தனது நண்பரான ரகுவுடன் சேர்ந்து ஜீவாவை வெட்டியது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாழ்வரசன், ரகு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.