மத்திய கிழக்கில் கடந்த 12 நாட்களாக இடையிலான கடும் போரின் பின்னணியில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இடையீட்டுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால், சமாதானமாக போர் முடிவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அமெரிக்கா கடந்த 22ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஈரானின் முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் கடுமையாக சேதமடைந்தன. அதன்பின்னர், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தையும் ஈரான் தாக்கியது.

இந்த தாக்குதல்கள் தொடர்ந்து மோசமாக மாறிவரும் நிலையில், சமாதான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மூவரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. போர் முடிவடைந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா மற்றும் சியோனிய ஆட்சியின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து, ஈரான் வெற்றி பெற்றுள்ளது. இந்த நேரத்தில், இந்திய மக்களிடையே உள்ள மதிப்புக்குரிய அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள், ஆன்மீக தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் எங்கள் நாட்டுக்காக உறுதியுடன் குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.