கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநரான வசீம் (35) என்பவர் தன்னுடைய நண்பரான சமீர் என்பவருடன் தன்னுடைய ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஆட்டோவை ஒரு காலியான இடத்தில் நிறுத்தினர்.

அப்போது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சுமார் 8 பேர் அவர்களிடம் பெயர்களை கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் அந்த கும்பல் கோபத்தில் அவர்களை சரமாரியாக தாக்கினர். அவர்களிடமிருந்து சமீர் தப்பி ஓடிவிட்ட நிலையில் வசீம் சிக்கிக்கொண்டார்.

இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் ஆட்டோ ஓட்டுனருக்கு காது கேட்கும் திறன் போய்விட்டதாகவும் உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.