தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளராக வேலை பார்த்த காளிராஜ்(67) என்பவர் உரிமம் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முத்துராமலிங்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்துராமலிங்கம் காளி ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளிராஜை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றம் காளிராஜுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.