பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் இருந்து ஒரு மனித நேயம் இல்லாத குடும்ப சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜக்மதி குன்வர் என்ற வயோதிக தாயை, அவரது க்ஷ மகன் போலா சிங் (ஜிதேந்திர சிங்), தனது சொத்து ஆசைக்காக 12 ஆண்டுகளாக அடைத்து வைத்து, அந்த பெண்ணின் கட்டைவிரல் ரேகையை பதிவு ஆவணங்களில் பெற, அவர் மீது மிகுந்த வன்முறையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கான தொடக்கப் பிரச்சனை, 2007 ஆம் ஆண்டில் இருந்து காணப்படுகிறது. இது தொடர்பாக ஜக்மதியின் பேரன் திவாகர் சிங் தெரிவித்ததாவது, “என் பாட்டியை டெல்லிக்கு அழைத்து செல்லும் பெயரில் போலா சிங் மற்றும் மற்றவர்கள் கூட்டிச்சென்றனர். பின்னர் அவர் திரும்பவில்லை. பல முறை போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, என் அத்தை நிர்மலா தேவி 2012-ம் ஆண்டு கடத்தல் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அதை மூடி மறைத்தனர்,” என தெரிவித்தார்.

இதற்கிடையில், போலா சிங் மற்றும் குண்டாவைச் சேர்ந்த அசோக் குமார் சிங் ஆகியோர், 3 ஏக்கர் 4 டசம் நிலத்தைப் பதிவு செய்ய, ஜக்மதியின் கட்டைவிரல் ரேகையை பெற்று, ஆவணத்தில் கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஜக்மதி ஒரு படிப்பறிவில்லாத பெண் என்பதால், கையெழுத்து போடத் தெரியாமல் கட்டைவிரல் ரேகையையே பதிவுசெய்துள்ளார்.

ஜனவரி 24, 2024 அன்று, ஜக்மதி குன்வர், போலீசாரின் உதவியுடன் அசோக் சிங்கின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டபோது, முழுமையான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இது பற்றி ஜக்மதி கூறுகையில், “என் உண்மையான மகன் போலா ஒரு துரோகி. எனது வளர்ப்பு மகன்கள் எனக்கு உண்மையான மகன்கள் போல இருக்கிறார்கள். அவர்களுடன் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்,” என உருக்கமாக தெரிவித்தார்.

தற்போது, ஜக்மதி குன்வர், 38/2007 மற்றும் 163/2015 என்ற உரிமை வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்கின்றார். மறுபுறம், போலா சிங் மற்றும் அசோக் சிங், ஜக்மதியின் வளர்ப்பு மகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது முழு குடும்பத்தை வழக்குகளில் சிக்க வைக்கும் வகையில் மாறியுள்ளது. “எனக்கு நீதிமன்றம் தரும் நீதி மீதே நம்பிக்கை உள்ளது” என ஜக்மதி குன்வர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, சொத்து, சுயநல ஆசை, மற்றும் குடும்ப வன்முறைகள் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளன என்பதை காட்டும் மிக கடுமையான எடுத்துக்காட்டு என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். மேலும் நீதிமன்றம் இந்த வழக்கில் நீதியை உறுதி செய்யும் எதிர்பார்ப்பு மாநிலமெங்கும் எழுந்துள்ளது.