
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பொறுப்பேற்றுள்ளார். இன்று ஆந்திர சட்டசபை கூடிய நிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் 31 மாதங்களுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு சட்டசபையில் காலடி வைத்து பேசிய சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சியினர் அப்போதைய எதிர்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி பற்றி தவறான கருத்துக்களை கூறியதாக கூறப்படும் நிலையில் அதற்காக அவர் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பான விவாதத்தின் போது பெரும் கண்ணீர் போராட்டத்திற்கு பிறகு சந்திரபாபு நாயுடு அவையை விட்டு வெளியேறினார்.
அவர் இனி நான் சட்டசபையில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதாவது இனிமேல் நான் சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டேன். நான் முதல்வரான பிறகு தான் சட்டசபையில் காலடி எடுத்து வைப்பேன் என்று சவால் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் அதன் பிறகு சட்டசபைக்கு செல்லாத சந்திரபாபு நாயுடு தற்போது முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் 31 மாதங்களுக்குப் பிறகு சட்டசபையில் காலடி வைத்து கெத்தாக பேசிய நிகழ்வு ஆந்திர அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.