
மதுரை நரிமேடு பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் முத்துச்சாமி (55) என்பவர், நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் மீது பரபரப்பான புகாரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அளித்துள்ளார். அதில், “நான் நடத்தும் ‘அலைகள் அச்சகம்’ கடைக்கு கீழே அம்மன் உணவகம் இயக்கப்படுகின்றது. உணவக வாகனங்களை பொதுப் பாதையில் நிறுத்தி, பள்ளி வாகனங்களுக்கும் ஆம்புலன்ஸுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றார்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “சமீபத்தில், லட்சுமணன் அனுமதியின்றி என் கடைக்குள் நுழைந்து பூட்டை உடைத்து, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். அதோடு, மாடிக்கு செல்லும் வழியையும் பூட்டி விட்டார். வீட்டில் வசிக்கும் நபரை வெளியேற்ற சொல்லி வீட்டில் குழப்பம் விளைவித்தார்” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய முத்துச்சாமி, “இது சூரி அறிந்தே நடக்கிறதா தெரியவில்லை. அவரின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தம்பி செயல்படுகிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனது பாதுகாப்புக்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்” என்று கூறினார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.