திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வேலாயுதம் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் நேற்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் குற்றவாளியான வேலாயுதத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும்,  20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஏற்கனவே வேலாயுதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் மேலும் 20 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவுள்ளார்.