
ஆந்திர மாநிலத்தில் உள்ள நிஜாம் பட்டினம் பகுதியில் அமரேந்திர பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவி அருணாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் பாபு வழக்கம் போல மது குடித்து வந்து தனது மனைவியை அடித்து தகராறு செய்ததோடு, கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அருணா ஒரு கட்டையால் பாபுவின் தலையில் ஓங்கி அடித்தார். அதன் பிறகு ஒரு கயிறை பாபுவின் கழுத்தில் கட்டி தெருவில் தரதரவென இழுத்து வந்தார்.
பாபு வலியில் அலறி துடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருணாவை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் கயிறு இறுக்கி பாபு இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பாபு உயிரிழந்ததை உறுதி செய்து அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அருணாவை போலீசார் தேடி வருகின்றனர்.