பெங்களூருவில் தளகட்டபுரா பகுதியில் உள்ள கமலம்மா ராமகிருஷ்ணப்ப முதியோர் இல்லத்தில், ஒரு மாதத்துக்கு முன்னர் சேர்க்கப்பட்ட முதியோர் தம்பதிகள் இருவர், தங்கள் அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். மதுரை சேர்ந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (81) மற்றும் அவரது மனைவி கே. ராதா (74) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தளகட்டபுரா போலீசார் “மர்மமான மரணம்” என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தம்பதியினர் முதலில் தங்கள் மகனான விஜயின் பெங்களூரு வீட்டில் தங்கியிருந்தனர். விஜய் ஒரு மென்பொறியியல் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார்.

மகன், மருமகளுடன் வாழ்ந்த தம்பதிகள், மருமகளின் சமையல் பிடிக்கவில்லை என்று கூறியதால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இதனால், தாமாகவே முதியோர் இல்லத்தில் தங்க விருப்பம் தெரிவித்த நிலையில், மே 18-ஆம் தேதி இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

ஜூன் 24ஆம் தேதி காலை, டீ வழங்க சென்ற பணியாளர் கதவைத் தட்டியபோது பதில் வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது இருவரும் அசைவில்லாமல் கிடந்ததை கண்டு சத்தம் போட்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அறையிலும், இருவரது கைபேசிகளில் எத்தகைய சுயக்குறிப்பு அல்லது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக மகன் விஜய் அளித்த விளக்கத்தில், “எனது பெற்றோர் 2021ஆம் ஆண்டு பைதராயணபுரா பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தனர். 2023ஆம் ஆண்டு வீட்டிற்கு திரும்பிய பின் மீண்டும் உணவுத் தொடர்பான சிக்கலால் இந்த இல்லத்திற்கு அனுப்பினேன்.

ஜூன் 23ஆம் தேதி இரவு செல்போனில் பேசிய போது, தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு உணவு உண்டு உறங்க சென்றனர்” என கூறியுள்ளார். இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.