2009 ஆம் வருடம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈரம், இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட  பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 14 வருடங்கள் கழித்து நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து சப்தம் படத்தை இயக்கி உள்ளார் அறிவழகன்.  இந்த படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், ரெடிங் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். ஈரம் படத்தை போலவே ஹாரர் திரில்லர் கதையாக இந்த படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் சப்தம் படம் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “சப்தம் படத்தை தாமதமாக வெளியிட்டு விளம்பரம் இன்றி கொன்றார்கள். ஆனால் ரசிகர்கள் அப்படத்தினை கொல்லவில்லை. திரையரங்கங்களுக்கு வந்து படம் பார்த்து அன்பை பொழிந்த அனைவருக்குமே நன்றி. அந்த அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.