கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (55) இறப்பு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி கோவிந்தசாமி சாலை விபத்தில் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது. அவரது மனைவி மாதேஸ்வரி, இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானபோது கோவிந்தசாமியின் மரணம் சாலை விபத்தில் அல்ல, கொலை என்று தெரியவந்தது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாதேஸ்வரியும் அவரது மகள் சரண்யாவும் இணைந்து கூலிப்படை அமைத்து கோவிந்த சாமியை கொலை செய்தது தெரியவந்தது. சாமல்பட்டியில் வசிக்கும் வேல்முருகன், பிரசாந்த், சிவக்குமார், நந்து ஆகியோர் கிரிக்கெட் பேட்டால் கோவிந்தசாமியின் தலையின் பின்புறம் அடித்து கொலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி இறந்ததாக நடமாடியது தெரியவந்தது. கோவிந்தசாமி மது குடித்துவிட்டு அடிக்கடி மாதேஸ்வரியுடன் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது குடும்ப சண்டைக்காக காவல் நிலையம் வர வேண்டாம் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிரஷாந்த் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கை, கால்களை உடைத்து போடுமாறு கூறியதாகவும், அவர்கள் கொலை செய்வார்கள் என்று நினைக்கவில்லை என மாதேஸ்வரி விசாரணையில் தெரிவித்துள்ளார். நேற்று மாதேஸ்வரி சரண்யா, வேல்முருகன், சிவகாசி, குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.