வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியாக களம் காண உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அமைச்சராக கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு இருக்கும்.

தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்க வில்லை. அது அவர்களது கட்சி பிரச்சனை. அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர். அவர்தான் முதல்வராக பதவி ஏற்பார். ஒரே கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி என்பதுதான் தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது. ஆட்சியும் ஒற்றை ஆட்சியாக தான் இருக்கும். கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்து விட்டது. ஆட்சியில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என கூறியுள்ளார்.