
மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிஜாய் கிராமத்தைச் சேர்ந்த கங்காவதி குஷ்வாஹா என்ற பெண், ஒரு வருடத்திற்கு முன் லவ்குஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரதிராம் குஷ்வாஹாவை திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கை, கங்காவதிக்கு பெண் குழந்தை பிறந்தவுடன், அப்படியே தலைகீழாக மாறியது.
இது பற்றி கங்காவதி கூறும்போது, பெண் குழந்தை பிறந்ததையே காரணமாகக் காட்டி, அவரது கணவர், மாமியார் மற்றும் குடும்பத்தினர் தன்னை அடிக்கத் தொடங்கினர். “பெண் குழந்தை உனக்கு பிறந்திருக்கே, செலவுகளுக்கு உன் தாய் வீட்டிலிருந்து பணம் கொண்டு வா” என திட்டியதுடன், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கங்காவதி கண்கலங்கக் கூறினார். இது மட்டுமல்லாமல், தனது 15 நாள் குழந்தையை கூட ரசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளார்.
தன்னை அடித்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தன்னிடம் இருப்பதாக கங்காவதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் முன்னிலையிலேயே மாமியார், கணவர் மற்றும் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், தாக்கும்போது தனது குழந்தை மடியில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தபோதும், அவர்கள் லேசான பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்தனர் என்றும், தனது எழுத்துப்பூர்வ புகாரின்படி முழுமையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, கங்காவதி தனது 15 நாள் குழந்தையுடன் நீதிக்காக வீடு வீடாக அலைந்து திரிகிறார். கணவர் ரதிராம் தற்போது வரை தனது மனைவியையும் மகளையும் தேட முயற்சிக்கவில்லையெனவும், ஒரு தாயின் உரிமைக்காகவும், குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் அவர் சமூக நீதியை வேண்டிக்கொள்கிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.