திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் ஒரு காளை மாடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பரந்தாமன் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளார்.

அங்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரந்தாமனின் கால் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார். பரந்தாமனுடன் சென்ற இளைஞர்கள் அவர் சேற்றில் மூழ்கியதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரந்தாமனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று பரந்தாமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.