திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதி ஓடையில் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த மாற்றுதிறனாளியை மீட்டனர். அவர் ஐயப்ப பக்தர் ஆவார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமர் என்பது தெரியவந்தது.

அவர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து மூன்று சக்கர வாகனத்தில் தனியாக சபரிமலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு சாமி தரிசனம் முடித்துவிட்டு 16-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டார். இந்த நிலையில் தேனி, வத்தலகுண்டு வழியாக சென்றபோது தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து குறுக்கு பாதையில் செல்வதற்காக கூகுள் மேப் உதவியை நாடினார். அதன்படி எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் பாலத்தை கடந்த போது இருசக்கர வாகனத்தின் சக்கரம் சேற்றில் சிக்கியது.

இரவு நேரமாக இருந்ததால் உதவிக்கு யாரும் வரவில்லை. அவர் செல்போன் மூலம் கர்நாடக போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 2 மணி நேரம் போராடி செல்போன் சிக்னலை வைத்து பரசுராமனை மீட்டு காவல் நிலையத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். அதன் பிறகு விடிந்ததும் ஊருக்கு அவரை அனுப்பி வைத்தனர். விரைந்து செயல்பட்ட தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.