
உத்தரபிரதேசம், பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றிய ரவீந்திர குமார், பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி ரகசிய தகவல்களை வெளிப்படுத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு பேஸ்புக்கில் “நேகா சர்மா” எனும் பாகிஸ்தான் உளவாளி, ரவீந்திர குமாருடன் தொடர்பை ஏற்படுத்தி, அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை கேட்டு வந்துள்ளார்.
அவரது காதல் வலையில் வீழ்ந்த ரவீந்திர குமார், தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி விவரங்கள், ஆயுத பரிசோதனைத் தகவல்கள், ரகசிய கடிதங்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் நேகாவிற்கு அனுப்பியிருக்கிறார். மேலும், இது வெளிவராமல் இருக்க “சந்தன் ஸ்டோர் கீப்பர் 2” என்ற பெயரில் அவரது எண்ணை பதிவு செய்து தொடர்பு கொண்டுள்ளார். பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு கருவிகள் மூலம் இந்த தகவல் கசியல் கண்டுபிடிக்கப்பட்டதும், தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரவீந்திர குமாரை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அவருடைய செல்போன் பரிசோதனை செய்யப்பட்டதில், ரகசிய ஆவணங்கள் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, இந்திய ரகசிய பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பாதுகாப்பு துறையினருக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை இலக்கு வைத்து, பாகிஸ்தான் உளவுத்துறை பெண்கள் மூலமாக தகவல்களை திரட்டுவதில் தீவிரமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தற்போது ரவீந்திர குமார் கைதானது, பாதுகாப்பு அமைப்புகளை இன்னும் அதிக விழிப்புடன் செயல்படுமாறு செய்யும் நிலையில் உள்ளது.