
சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை என்பது அதிகரித்த நிலையில் கடந்த வருடம் தமிழரசியின் சகோதரர் சக்திவேலை (20) கலையரசன் தாக்கி உள்ளார். இதன் காரணமாக கலையரசன் மீது மற்றொரு சகோதரர் சஞ்சய் (19) வஞ்சம் வைத்து காத்திருந்தார். கடந்த 15ஆம் தேதி கலையரசன் அசோக் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சக்திவேல், சஞ்சய் மற்றும் அவரது நண்பர் சுனில் குமார் (20) ஆகியோர் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கலையரசனின் குடும்பத்தினர் அவரது மனைவி தமிழரசி, அவரது நண்பர் சரவணன், தாயார் உட்பட குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் தமிழரசி மற்றும் சரவணன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்த போது இருவரும் தலைமறை வாகிவிட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்த நிலையில் தமிழரசியின் தாயார் சந்தியா (65) என்பவருக்கும் கொலை வழக்கில் தொடர்பு இருந்த நிலையில் தற்போது அவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் கணவனை கொலை செய்ய மனைவியின் மொத்த குடும்பமும் சேர்ந்து சதி திட்டம் தீட்டியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.