உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியாவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், புதன்கிழமை ஒரு கணவர் தனது மனைவியை அவளது காதலனுடன்  ஒன்றாக பார்த்துள்ளார். இதனால் அவர் கடும் கோபத்தில்  தன் மனைவியின் மூக்கை கடித்து விட்டார்.

காயமடைந்த 25 வயதுடைய அந்தப் பெண், ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில் சிகிச்சைக்காக முதலில் ஹர்தோய் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல் நலம் மோசம் அடைந்ததால், மேல் சிகிச்சைக்காக லக்னோவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் அளித்த தகவலின்படி, அந்தப் பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த காதலனை சந்திக்கச் சென்றபோது, அவரது கணவர் ராம் கிலாவன் அவரைப் பின்தொடர்ந்து காதலனின் வீட்டிற்குச் சென்றார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ராம் கிலாவன் தன் மனைவியின் மூக்கைக் கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் அழுகை சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஊரினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கூடுதல் எஸ்பி நரேந்திர குமார் கூறும்போது, “இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு அனைத்துக் கோணங்களிலும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.