
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ரோட்கலி கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய இரு குழந்தைகளை டீ மற்றும் பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
முஸ்கான் என்ற பெண், தனது 4 வயது மகன் அர்ஹான் மற்றும் 1 வயது மகள் அனாயாவுக்கு விஷம் கொடுத்து கொன்றிருக்கிறார். அதாவது முஸ்கான் தனது கணவர் வஸீம் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், தனது காதலன் ஜுனெயத்துடன் ஹனிமூனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் தனது குழந்தைகள் இடையூறாக இருக்கிறார்கள் என நினைத்த அவர், அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் டீ மற்றும் பிஸ்கட்டில் அவர் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பின்னர் தன்னுடைய குழந்தைகள் எப்படியோ இறந்து விட்டதாக முஸ்கான் நாடகமாடிய நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டது. முதலில், குடும்பத்தினர் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய மறுத்தனர். பின்னர் போலீசார் கட்டாயப்படுத்தியதால் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் விஷம் குடித்ததால் மரணம் அடைந்தது உறுதியாகப்பட்டது.
போலீசார் தொடக்க விசாரணையின் போது முஸ்கானிடம் பல சந்தேகங்கள் எழுந்தன. அவளிடம் மொபைலை கேட்டபோது காட்ட மறுத்ததாலும், முரண்பாடாக பேசியதன் காரணமாகவும், கடுமையான விசாரணை நடத்தியபோது உண்மை வெளிவந்தது. தனது குழந்தைகள் புதிய வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் தான் கொலை செய்ததாக அவள் ஒப்புக்கொண்டார்.
தற்போது ஜுனெயத் என்ற காதலன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைக் கைது செய்ய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் ஏற்கனவே முஸ்கான் என்ற ஒரு பெண் தன்னுடைய கணவனை 15 துண்டுகளாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் முஸ்கான் என்ற ஒரு பெண் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் தன் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.