
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், தனது 12 வயது மகனை கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை ரோமா குமாரி (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது தாயார் திருமணத்திற்கு புறம்பாக வைத்திருந்த காதல் உறவை, மகன் ஷ்ரேயான்ஷ் எதிர்த்ததன் காரணமாக, கடந்த ஜூன் 14ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுவன் தாயின் கள்ளக்காதல் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, ரோமா கோபத்தில் குழந்தையை கொடுரமாக அடித்து கொலை செய்தார். பின்னர், ரோமா மற்றும் அவரது காதலன் நிர்மல் பாஸ்வான் இருவரும் சேர்ந்து, சிறுவனின் உடலை பெத்னா கிராமத்திற்கு எடுத்து சென்றனர். கோன்ஹார் பாலம் அருகே உள்ள புல்வெளியில் உடலை வீசி அவர்கள் தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 15ஆம் தேதி, பார் போலீசார் அந்த பகுதியில் எரிக்கப்பட்ட சடலத்தை கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் அராரியாவைச் சேர்ந்த ரோமா, கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சஹர்சா பகுதியைச் சேர்ந்த நிர்மல் பாஸ்வான் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக உள்ளார். ரோமாவும் நிர்மலும் அந்தக் கல்லூரியில் பயிற்சியின் போது சந்தித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரோமா நிர்மலுடன் தொடர்ந்த காதல் உறவை அவரது குழந்தைகள் ஏற்க மறுத்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள நிர்மல் பாஸ்வானை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.