நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒகுன் மாநிலத்தின் Olabisi Onabanjo University (OOU) யில் நடந்த ஓர் அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது தேர்வுக்கு முன்னர் மாணவிகள் ‘பிரா அணிந்துள்ளனரா’ என்பதை உறுதி செய்யும் பெயரில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், மாணவிகளின் மார்புப் பகுதியில் தொட்டு பரிசோதனை செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியதோடு, நூற்றுக்கணக்கானோர் அதனை கண்டித்து வருகின்றனர்.

சம்பவத்தை விளக்கும் சிசிடிவி வீடியோ ஒன்று X தளத்தில் வைரலாக பரவியுள்ளது. அதில் பரீட்சை எழுத செல்லும் பெண் மாணவிகளை பெண் பணியாளர்கள் மார்பில் தொட்டு பிரா அணிந்துள்ளனரா என்பதை சரிபார்க்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஆவேசமான கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன. “இது பாலியல் தொல்லை” என்றும், “மனித உரிமை மீறல்” என்றும் பலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் முஇஸ் ஒலாடுன்ஜி, “இது புதிய கொள்கையல்ல. ‘No Bra, No Entry’ என்பது பல்கலைக்கழக ஒழுக்க நெறி கொள்கையின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார். மேலும், பெண்கள் ஆடம்பரமாகவும் அல்லது தீவிரமாக கவனத்தை ஈர்க்கும் வகையில் உடை அணிய வேண்டாம் எனும் நோக்கத்தில் இந்த ஒழுக்கக்கோட்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்திடையே உரிய மரியாதை நிலவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனங்களால், அவர்கள் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மின்னணு உரிமைகள் மற்றும் பெண்களின் உடல் சுதந்திரம் குறித்து இந்த விவகாரம் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.